லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கிளைவ் ஸ்திரீட் வழியாகச் சென்றோர், வழக்கத்திற்கு மாறுபட்ட காட்சியாக, கரகாட்டம், பொய்க்கால் மாடு, மயிலாட்டம் ஆகியவற்றைக் கண்டனர்.
லிட்டில் இந்தியாவில் சனிக்கிழமை (ஜனவரி 6) மாலை ஆறு மணியளவில் தொடங்கிய பொங்கல் ஒளியூட்டு விழாவில் மழைத் தூறலுக்கிடையே கிராமியக் கலைஞர்கள் உற்சாகமழை பொழியச் செய்தனர்.
சாலையோரத்தில் இடம் மிகக் குறுகலாக இருந்தபோதும் இயன்றவரை அசைந்தாடி சுற்றியிருந்தோரை வரவேற்றனர் .
நிகழ்ச்சிக்காக இங்கு வந்த 10 கிராமியக் கலைஞர்களில், சிங்கப்பூருக்கு முதன்முறையாக வந்துள்ள பாடகி தீபிகா அன்பரசனும் ஒருவர்.
குடும்பச் சூழல் காரணமாக பாடத் தொடங்கிய தமக்கு இதுவே முதல் வெளிநாட்டு மேடை அனுபவம் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகத் திருவாட்டி தீபிகா, 29, கூறினார்.
நிகழ்ச்சி இடம்பெற்ற கூடாரத்தில், விக்னேஷ் பால் பண்ணையிலிருந்து மூன்று காளைகள், இரண்டு பசுக்கள் ஆகியவற்றுடன் பசுக்கன்றுகளும் ஆடுகளும் தருவிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டன.
அழைக்கப்பட்ட 200 விருந்தினர்கள் உட்பட மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவுடன் மேயர் டெனிஸ் புவா, துணையமைச்சர் ஆல்வின் டான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரளி பிள்ளை, டேரல் டேவிட் ஆகியோரும் வருகையளித்தனர்.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதை ஊக்குவிக்கும் ‘பிளாஸ்டிக் இல்லா லிட்டில் இந்தியா’ இயக்கத்தை அமைச்சர் ஃபூ நிகழ்ச்சி மேடையில் தொடங்கி வைத்தார்.
இரவு 8 மணியளவில் திருவாட்டி ஃபூ, ஒளியூட்டைத் தொடங்கும் வகையில் குத்துவிளக்கு ஏற்றினார். தேக்கா நிலையத்திற்கு அருகிலுள்ள சிராங்கூன் ரோட்டின் முகப்பு முதல் கிச்சனர் ரோடு வரை உள்ள 23 ஒளித்தோரணங்களும் மின்னத் தொடங்கின.
இம்மாதம் 31ஆம் தேதி வரை அவை தொடர்ந்து மின்னும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது அறிமுகம் செய்யப்பட்ட லிட்டில் இந்தியாவின் சின்னமான ‘தேக்கா ராஜா’வின் நடமாடும் உருவ பொம்மை, முதன்முறையாக பொங்கலுக்காகவும் இணைகிறது.
ஒளித்தோரணங்கள் உள்ள இடங்களில் ‘தேக்கா ராஜா’ இம்மாத இறுதிவரை சுற்றுப்பயணிகளுக்கு வழிகாட்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.