சோல்: ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, மனிதநேய உதவியாகத் தென்கொரியா $3 மில்லியன் உதவி வழங்குகிறது.
தென்கொரிய வெளியுறவு அமைச்சு, வியாழக்கிழமை (ஜனவரி 11) அதனைத் தெரிவித்தது.
நிலநடுக்கத்தில் சேதமடைந்த பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளுக்கும் உள்ளூர்வாசிகளின் வாழ்க்கை விரைவில் வழக்க நிலைக்குத் திரும்பவும் இந்த உதவி கைகொடுக்கும் என்று தென்கொரிய அரசாங்கம் நம்புவதாக அமைச்சு கூறியது.
புத்தாண்டு நாளில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதில் ஜப்பானின் மேற்குப் பகுதியில் 200க்கு மேற்பட்டோர் மாண்டனர். 26,000க்கு மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது.
தென்கொரியாவின் உதவியை வரவேற்பதாகக் கூறிய ஜப்பான், இது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் காட்டுவதாகக் குறிப்பிட்டது.
முன்னதாக அமெரிக்காவிடம் அவசரகால உதவியை நாடியிருப்பதாகவும் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளின் உதவியைத் தற்காலிகமாக நிராகரிப்பதாகவும் ஜப்பான் கூறியிருந்தது.