பாரிஸ்: கல்விக்கு வயது தடையல்ல என்பதை பிரெஞ்சு மூதாட்டி ஒருவர் நிரூபித்துள்ளார். பிரான்சில் வசிக்கும் 91 வயதான கோலெட் போர்லையர் என்ற மூதாட்டி, முனைவர் பட்டப்படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் அதற்கான பணியைத் தொடங்கியபோதிலும் இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் அவர் அந்தப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இடையில் தனக்கு ஓய்வு தேவைப்பட்டதால் ஆய்வுக் கட்டுரையை எழுதி முடிக்க தனக்கு இத்தனை காலம் ஆனதாக அந்த மூதாட்டி கூறியுள்ளார்.
"20வது நூற்றாண்டு பிற்பகுதியில் பெசன்கான் நகரில் குடியேறிகள்" என்ற தலைப்பில் அந்த மூதாட்டி எழுதிய ஆய்வுக் கட்டுரை அவருக்கு சிறப்பைத் தேடித் தந்தது. பிரான்சில் உள்ள பெசன்கான் நகரில் ஆசிரியராக இருந்த போர்லையர் தன் ஆசிரியர் அனுபவத்தைக் கொண்டு அக் கட்டுரையை எழுதினார். 1983ஆம் ஆண்டு வேலை ஓய்வு பெற்றதும் பிஎச்டி துறையில் பட்டம் பெற அவர் விரும்பினாராம். அப்பட்டத்தைப் பெறுவதற்கு பிரான்சில் வழக்கமாக ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்த மூதாட்டிக்கு முப்பது ஆண்டு களுக்குப் பின்னரே அவரது விருப்பம் நிறைவேறியுள்ளது.