எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து (ஜனவரி 17) சீனப் புத்தாண்டுக்கு அன்பளிப்பாக வழங்க பழைய பணத் தாள்களுக்கு புதிய அங் பாவ் பணத் தாள்களை மாற்றிக் கொள்ள முன்பதிவு செய்யலாம்.
இதனை இணையம் வழியாக டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி வங்கிகள் மூலம் செய்துகொள்ளலாம். ஜனவரி 24ஆம் தேதியிலிருந்து புதிய பணத் தாள்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் திங்கட்கிழமை (ஜனவரி 15) கூறியது.
வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று புதிய தாள்களுக்கு மாற்றிக்கொள்ள விரும்புவோர் ஒன்று, 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது உடற்குறையுள்ளோராக இருத்தல் வேண்டும்.
ஜனவரி 24லிருந்து அன்பளிப்புக்கு உகந்த புதிய தாள்களை குறிப்பிட்ட டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஆகியவற்றின் தானியக்க வங்கி இயந்திரங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
அன்பளிப்புக்கு உகந்த தாள்கள் என்பது சுத்தமான, மறுசுழற்சிக்கு ஏதுவான தாள்கள் என்று ஆணையம் விளக்கமளித்தது. அவை தரத்தில் தானியக்க வங்கி இயந்திரங்கள் வழி பெறும் தாள்களை ஒத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.