போபால்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மூன்றாவது ஆண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், பிறந்து 12 நாள்களே ஆன பச்சிளங் குழந்தையைக் கொலை செய்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.
பஜர்வாடா எனும் ஊரில் வசிக்கும் அனில் உய்கே எனும் ஆடவருக்கும் அவரது மனைவி ருச்சிகாவுக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் வயது முறையே 7, 5.
இரண்டாவது மகன் பிறந்த பிறகு குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்படி உய்கே, தன் மனைவியிடம் கூறியதாகவும் ஆனால் ருச்சிகா அதற்கு இணங்கவில்லை என்றும் தெரிகிறது.
இந்நிலையில் மீண்டும் ருச்சிகா கர்ப்பம் தரிக்கவே பெண் குழந்தையை எதிர்பார்த்தார் உய்கே. மூன்றாவதும் ஆண் குழந்தையே பிறந்தது. சென்ற வார இறுதியில் மது அருந்திவிட்டு தன் மனைவியை அடித்து சண்டை போட்டார் உய்கே.
அடி தாங்க முடியாத ருச்சிகா பிரச்சினை பெரிதாவதைத் தவிர்க்க வீட்டை விட்டு வெளியே சென்ற வேளையில், பச்சிளங் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்ற உய்கே பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தகவலறிந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.