உலகின் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தில் வந்துள்ளது.
அனைத்துலக ஊழல் எதிர்ப்பு அமைப்பான ‘டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல்’ வெளியிட்டுள்ள அந்தத் தரவரிசையில், ஆசியாவில் ஊழல் ஆகக் குறைந்த நாடாகவும் சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளது.
குழுவின் ஊழல் குறியீட்டில் (சிபிஐ) கடந்த ஆண்டில் பெற்றதைப் போலவே இந்த ஆண்டும் சிங்கப்பூர், 100க்கு 83 புள்ளிகளைப் பெற்றது.
மதிப்பீடுகளை அந்த அமைப்பு 2012ல் மாற்றியமைத்த பிறகு, ஆக அதிகமான புள்ளியாக 87 இருந்தது. அரசாங்கத் துறை ஊழல் குறித்து, சிபிஐ வல்லுநர்களும் வணிகர்களும் 180 நாடுகள், பிரதேசங்களுக்கு 0 முதல் 100 புள்ளிகள் வரை வழங்கினர்.
2023ஆம் ஆண்டின் தரவரிசையில் 90 புள்ளிகளுடன் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதல் இடத்தை அந்நாடு தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஃபின்லாந்து 87, நியூசிலாந்து 85, நார்வே 84 புள்ளிகளைப் பெற்றுள்ளன.
ஜனவரி 30ஆம் தேதி அறிக்கையை வெளியிட்ட டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல், 2023ல், மூன்றில் இரு நாடுகள் 50க்கும் குறைவான புள்ளிகளைப் பெற்றதாக குறிப்பிட்டது.
ஊழலைக் குற்றமாக்குவதும், உலகெங்கிலும் சிறப்பு ஊழல் எதிர்ப்பு அமைப்புகளை நிறுவுவதிலும் முன்னேற்றம் இருந்தபோதிலும், 28 நாடுகளில் மட்டுமே ஊழல் குறியீடு மேம்பட்டுள்ளது. 34 நாடுகள், பிரதேசங்களில் மோசமடைந்துள்ளன என்று அந்த அமைப்பு குறிப்பிட்டது.
கடந்த 2023ல் அதிக மதிப்பெண் பெற்ற பகுதியாக மேற்கு ஐரோப்பாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளன. எனினும் கடந்த பத்தாண்டுகளில் அதன் சராசரி மதிப்பெண் 100க்கு 65 ஆகக் குறைந்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.
இப்பகுதியில் மதிப்பிடப்பட்ட 31 நாடுகளில், ஆறு மட்டுமே மேம்பட்ட மதிப்பெண்களைக் கொண்டிருந்தன, எட்டு நாடுகள் சரிவைக் காட்டின. ஆசிய பசிபிக் வட்டாரத்தின் முதல் ஐந்து வட்டாரங்களாக நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆஸ்திரேலியா (75), ஹாங்காங் (75), ஜப்பான் (73) ஆகியவை வந்துள்ளன.
ஜூலை 11ஆம் தேதி கைது செய்யப்பட்ட 61 வயது முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் சம்பந்தப்பட்ட வழக்கு உட்பட 2023ல் சிங்கப்பூர் பல ஊழல் வழக்கு விசாரணையைக் கண்டது.
ஈஸ்வரனின் வழக்கில் ஏற்படும் எந்தவொரு தாக்கமும் சற்று நீண்ட காலத்தில் கருத்தில் கொள்ளப்படும் என்று டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனலின் ஆசிய வட்டார ஒருங்கிணைப்பாளர் திருவாட்டி யுரான்ட்செட்ஸெக் உல்ஸிகூ கூறினார்.
அதிக மதிப்பெண்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் இருப்பதைக் குறிப்பிட்ட திருவாட்டி யுரான்ட்செட்செக், “அதிக மதிப்பெண்களைக் கொண்ட ஒரு நாடு ஊழல் இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை,” என்றார்.
85வது இடத்தில் இந்தியா, 76வது இடத்தில் சீனா
இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு 85வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 93வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு 40 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 39 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதேபோல் கஜகஸ்தான், லெசோத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 மதிப்பெண்களுடன் இந்தியாவுடன் 93வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன.
நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல், முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 133வது இடத்தையும், இலங்கை 115வது இடத்தையும் சீனா 76வது இடத்தையும் பிடித்துள்ளன. வெறும் 11 மதிப்பெண்களுடன் சோமாலியா நாடு கடைசி இடத்தில் உள்ளது.