சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டுச் சேரும் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் இடங்களைக் கேட்டுள்ளன. இதுதவிர விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுடன் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை திமுக தேர்தல் குழுவை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சந்தித்து பேசினர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய இரண்டு கட்சிகளிடம் திமுக தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த சந்திப்பின்போது காஞ்சிபுரம், ஈரோடு, விருதுநகர் உள்ளிட்ட 5 தொகுதிகளின் பட்டியல் மதிமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்திப்பு முடிவில், அர்ஜூன்ராஜ் கூறும்போது, “பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. இம்முறை மதிமுக கட்சி சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம்,” என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சியினர் மதுரை, கோயம்புத்தூர் தவிர்த்து கூடுதலாக தங்களுக்கு தென்காசி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளையும் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
“கடந்த முறை ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் மட்டுமே தரப்பட்டால் தேவையான முடிவு எடுக்கப்படும்,” என்று அக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் பி.சம்பத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை அழைப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று திமுகவின் தொகுதி பங்கீட்டுக் குழுவில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.