ராமநாதபுரம்: தான் வாங்கிச் சென்ற மட்டன் பிரியாணியில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், அங்குள்ள முனியாண்டி விலாஸ் உணவகத்தில் மட்டன் பிரியாணி வாங்கி, வீட்டிற்கு எடுத்துச் சென்றார். வீட்டில் சென்று உணவுப் பொட்டலத்தைப் பிரித்தபோது, அதில் புழு இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, உணவகத்திற்குச் சென்று பிரியாணியில் புழு இருந்தது குறித்து மணிகண்டன் கூறினார். அதற்கு, உணவக உரிமையாளர் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறையிடம் மணிகண்டன் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட உணவகத்திற்குச் சென்று ஆய்வுசெய்த அதிகாரிகள், பிரியாணி மாதிரிகளைச் சேகரித்து ஆய்விற்கு அனுப்பினர்.
மேலும், அந்த உணவகத்திற்கு ரூ.2,000 அபராதம் விதித்த அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் உரிய விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.