உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒரே தேசியத் தேர்வுக் கால அட்டவணை எனும் நடைமுறையின்கீழ், தற்போதைய உயர்நிலை 1 மாணவர்கள் 2027ல் ஒரே நேரத்தில் தேசியத் தேர்வை எழுதுவர்.
அவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள சிங்கப்பூர் - கேம்பிரிட்ஜ் உயர்நிலைக் கல்விச் சான்றிதழ் தேர்வை 2027ஆம் ஆண்டு எழுதுவர் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வாண்டு வழக்கநிலை, விரைவுநிலை என உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களைப் பிரிக்கும் முறை முடிவுக்கு வந்துள்ளது. அதற்குப் பதிலாக மாணவர்கள் அவரவர்க்கு விருப்பமான, திறனுக்கேற்ற பாடங்களை வெவ்வேறு நிலைகளில் தேர்வு செய்து பயிலலாம் என்ற மாற்றம் வந்துள்ளது.
இதன்படி, மாணவர்கள் தங்கள் தாய்மொழிப் பாடத்தில் ஒரே தேர்வை எதிர்கொள்வர். இதனால், அவர்கள் மீண்டும் அதே தேர்வை எழுத இயலாது என்று கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர் சான் கூறினார்.
தற்பொழுது, தாய்மொழிப் பாடத்தில் இரண்டு முறை மாணவர்கள் தேர்வு எழுதலாம்.
ஆண்டு மத்தியில், வழக்கமாக ஜூன் மாதப் பள்ளி விடுமுறைக் காலமான முதல் வாரத்திலும் நவம்பர் மாதத்திலும் ஓ நிலைத் தேர்வுகளுடனும் தாய்மொழிப் பாடத் தேர்வுகள் நடைபெறும். மாணவர்கள் இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
“இதில் தங்கள் தாய்மொழித் தேர்வு முடிவுகளை மேம்படுத்திக் கொள்ள இருக்கும் வாய்ப்பு இனி இராது என்பதை நினைத்து மாணவர்களில் சிலர் கவலை கொள்ளலாம் என்பதை நான் அறிவேன்.
“ஆனால், மாணவர்கள் சிறப்பாகச் செய்வது, ஒவ்வொரு தேர்வு மதிப்பெண்ணையும் நாடிச் செல்வது, சீரான வேகத்தில் கல்வி கற்பது ஆகியவற்றில் சமநிலை காணவேண்டி உள்ளது,” என்று அமைச்சர் விளக்கினார்.