எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டிற்கு (எஸ்எம்டி) 2022, 2023ஆம் நிதியாண்டுகளில் ஏறக்குறைய $320 மில்லியன் நிதி வழங்கப்பட்டதாக தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.
எஸ்எம்டி அதன் செயல்திறன் இலக்குகள் சிலவற்றை எட்டியபிறகு அந்த நிதி வழங்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊடகச் சூழல் மேலும் சவால்மிக்கதாக இருக்கும் என்று கருதப்படும் நிலையில், 2024ஆம் நிதியாண்டில் ஏறத்தாழ $260 மில்லியன் நிதியை அரசாங்கம் ஒதுக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மார்ச் 1ஆம் தேதி நடைபெற்ற அமைச்சின் வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு குறித்த விவாதத்தின்போது திருவாட்டி டியோ இந்தத் தகவலை வெளியிட்டார்.
நிறுவனம் ஒட்டுமொத்த வாசகர் எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதன் மின்னிலக்கச் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஓரளவிற்கு அதிகரித்துள்ளது. இருந்தபோதும் இளையர்களைச் சென்றடைதல், தாய்மொழி வாசகர்களைச் சென்றடைதல், இணையத்தளங்களிலும் செயலிகளிலும் வாசகர்கள் செலவிடும் சராசரி நேரம் போன்ற அம்சங்களில் அது இலக்குகளை எட்டவில்லை என்று அமைச்சர் கூறினார்.
“எனவே, உறுதிகூறப்பட்ட முழுமையான நிதியை எஸ்பிஎச் மீடியா பெறவில்லை,” என்றார் திருவாட்டி டியோ.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கம், எஸ்பிஎச் மீடியாவிற்கு $900 மில்லியன் நிதியாதரவு வழங்குமென 2022 பிப்ரவரியில் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் $180 மில்லியன் வரை வழங்கப்படும் என்று அமைச்சர் டியோ அப்போது கூறியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், எஸ்பிஎச் மீடியாவுக்கான நிதி, திறனாளர்கள், தொழில்நுட்பம், தாய்மொழித் திறன் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களின் தொடர்பில் வழங்கப்படுவதாக மீண்டும் விளக்கமளித்தார்.
தரமான இதழியல், மின்னிலக்க உருமாற்றம், பல கலாசாரங்களைப் பேணுதல் ஆகியவற்றுக்கு அரசாங்கம் தரும் முக்கியத்துவத்தை அது வெளிப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.