திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வர்க்கலா கடற்கரைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் சிலர், கடல் சீற்றம் காரணமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
சுற்றுலாப் பயணிகள் மிதக்கும் பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்ததால் கடலில் மூழ்காமல் மிதந்தனர். இருப்பினும் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடல் சீற்றம் மோசமாக இருந்ததால் மீட்புப் பணி மெதுவாக நடந்தது. இருப்பினும் அதிகாரிகள் திறமையாக செயல்பட்டு அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் நடந்தது.
கடல் அழகை சுற்றுலாப் பயணிகள் ரசிக்க 100 மீட்டர் நீளத்தில் கடலுக்குள் மிதக்கும் நடைபாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் 50க்கும் மேற்பட்டவர்கள் நின்றுகொண்டிருந்த போது திடீரென்று கடல் சீற்றம் ஏற்பட்டது.
ராட்சத அலைகள் பாலத்தில் பயங்கரமாக மோதின. இதனால் பாலத்தில் இருந்த சில சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தால் வர்க்கலா கடற்கரைப் பகுதியில் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது.