சிங்கப்பூர், மார்ச் 20ஆம் தேதி, காஸாவில் மனிதநேய உதவிப்பொருள்களை முதல்முறையாக விமானத்திலிருந்து விநியோகித்துள்ளது.
உணவு, அத்தியாவசியப் பொருள்கள் வான்குடைகளுடன் இணைக்கப்பட்டு விமானத்திலிருந்து இறக்கப்பட்டன.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை மார்ச் 20ஆம் தேதி அதன் சி-130 விமானம் வெற்றிகரமாக அப்பணியை நிறைவுசெய்ததாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
“வான்வழி விநியோகம், ஜோர்தானிய ஆகாயப் படையுடன் அணுக்கமாக ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டது.
“சிறிய உதவியே என்றாலும், காஸாவில் மனிதநேய நிலவரத்தை மேம்படுத்த இது உதவும் என்று நம்புகிறோம்,” என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், “காஸாவிலுள்ள குடும்பங்களின் துயரைத் துடைக்க இந்த உதவிபொருள்கள் உதவும் என்று நம்புகிறோம்,” என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மார்ச் 19ஆம் தேதி வெளியிட்ட பதிவில் காஸாவில் வான்வழியாக உதவிப்பொருள்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிங்கப்பூர் ஆகாயப்படையினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ஜோர்தானின் ஆலோசனையின்பேரில் வழங்கப்படும் உதவிப்பொருள் பொட்டலங்களில் உணவு, மருந்துப் பொருள்கள், மருத்துவக் கருவிகள் போன்றவை இடம்பெற்றிருப்பதாக வெளியுறவு அமைச்சு சென்ற ஞாயிற்றுக்கிழமை கூறியது.
சிங்கப்பூர் மூன்றாவது முறையாக காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதநேய உதவிப்பொருள்களை அனுப்பியுள்ளது.
மேலும், ரஹ்மத்தன் லில் ஆலமின் அறக்கட்டளை திரட்டிய $6.1 மில்லியனுக்கான காசோலையை பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன நிவாரண அமைப்பிடம் (யுஎன்ஆர்டபிள்யூஏ) அது வழங்கியுள்ளது.
காஸாவிற்கு தரை வழியே நிவாரணப் பொருள்களை அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், வான்வழியாக உதவிப்பொருள்களை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சில நாடுகளுடன் சிங்கப்பூரும் கைகோத்துள்ளது.
இந்த மனிதநேய உதவிப்பொருள்கள், காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள்மேல் சிங்கப்பூர் காட்டும் அக்கறை, பரிவு போன்றவற்றை வெளிப்படுத்துவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.