கேலாங்கில் பாதசாரிகள் இருவர் காயமடைந்த விபத்தை விளைவித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் உரிமமின்றி கார் ஓட்டியதாக நம்பப்படுகிறது.
சிம்ஸ் அவென்யூ ஈஸ்ட்டை நோக்கிச் செல்லும் சிம்ஸ் அவென்யூ சாலையில் சனிக்கிழமை (மார்ச் 23) நள்ளிரவுக்கு சிறிது நேரத்துக்கு முன்னர் அந்த விபத்து நிகழ்ந்தது. ஸேக்கரி சின் ஜியா லெ எனும் ஆடவர் பாதசாரிகள் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பாதசாரிகளான 51 வயது ஆடவர் ஒருவரும் 32 வயது மாது ஒருவரும் இவ்விபத்துக்கு ஆளாயினர்.
திங்கட்கிழமையன்று (மார்ச் 25) 21 வயது சின் மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கவனமின்றி காரை ஓட்டியபோது பாதசாரிகள் இருவருக்கு மோசமான காயம் விளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
பாதிக்கப்பட்ட பாதசாரிகளுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெறவில்லை. சின் ஏற்கெனவே போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்திருப்பது ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது.
தகுந்த உரிமமின்றி வாகனம் ஓட்டியது, கவனமின்றி வாகனம் ஓட்டியது என சின் மீது ஏற்கெனவே இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவை நிரூபிக்கப்பட்டன.