அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடில் உள்ள பேஷோர் பார்க் கூட்டுரிமை வீட்டில் 2018ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையே, பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒரு சம்பவத்தில் அவர்கள், பணிப்பெண் சுகியாட்டியின் தலையைச் சுவரில் சிலமுறை மோதியதால் அவருக்குக் காதில் ரத்தம் வடிந்ததாகக் கூறப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டோரில் ஒருவர் பணிப்பெண்ணைத் தரையில் தள்ளியதில் சுகியாட்டி சிறிது நேரம் நினைவிழந்ததாகச் சொல்லப்பட்டது.
மார்ச் 27ஆம் தேதி, திருவாட்டி சுகியாட்டியைத் துன்புறுத்தியதாக 25 வயது அவேரி டரில் சடேரியா மீது ஒரு குற்றச்சாட்டும் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக 29 வயது ஏடென் லூயிச் நார்மன் மீது இரண்டு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
அவ்விருவரும் சிங்கப்பூரர்கள். குற்றம் சாட்டப்பட்ட மூன்றாவது நபர், 60 வயது அமெரிக்கரான பிகிராஃப்ட் வாரன் ரஸ்ஸல்.
திருவாட்டி சுகியாட்டியின் அப்போதைய முதலாளியான அவர் மீது, தஸ்லிமா சதக்கா எனும் பெண், சுகியாட்டியைத் துன்புறுத்த அனுமதித்ததாகக் கூறப்படுவது உட்பட சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வெளிநாட்டு ஊழியர் வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் ரஸ்ஸல் மீது இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டன. திருவாட்டி சுகியாட்டியைப் பாதுகாக்கத் தவறியதாக மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன.
திருவாட்டி தஸ்லிமா மீது மார்ச் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படவில்லை.
பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் நால்வருக்கும் இடையிலான உறவு குறித்து தகவல் இல்லை.
பணிப்பெண்ணின் தற்போதைய நிலை குறித்தும் அவர் எங்கிருக்கிறார் என்றும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
சடேரியா, நார்மன், ரஸ்ஸல் ஆகியோர் மீதான வழக்கு ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.