போபால்: இந்தியாவின் போபாலைச் சேர்ந்த தம்பதியரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
அவ்விருவரும் சேர்ந்து அந்த ஆடவரின் பாட்டியை அடிக்கும் காணொளி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து, அவர்கள் கைதானதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
அந்தக் காணொளி சமூக ஊடகத்தில் பரவி வந்தது. அதில், வயதான பாட்டியை அந்த ஆடவர் இறுக்கிப் பிடித்திருந்ததையும், அவரது மனைவி மர அளவுகோலை வைத்து பாட்டியை அடித்துக்கொண்டிருந்ததையும் பார்க்கமுடிந்தது.
எழுபது வயதுக்கும் மேற்பட்ட அந்தப் பாட்டி, தம்பதியருக்குப் பிடித்த வகையில் உணவு சமைக்கவில்லை என்று கூறப்படுவதாக காவல்துறை தெரிவித்தது.
தம்பதியின் அண்டைவீட்டார் அந்தக் காணொளியை எடுத்ததாகவும் அது கூறியது.
தீபக் சென், பூஜா சென் ஆகிய இருவருக்கும் எதிராக வழக்குப் பதிவுசெய்திருப்பதாக போபால் காவல்துறை ஆணையர் ஹரிநாராயன்சாரி மிஷ்ரா ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்துகொண்டார்.
அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.