லிட்டில் இந்தியாவில் மதுக்கூடம் நடத்தி வந்த ராஜ்குமார் பாலா என்னும் 41 வயது ஆடவர் 17 வயதுப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
ஆடவர் மீது பாலியல் வன்புணர்வு, பெண்ணின் மானத்திற்கு பங்கம் விளைவித்தது, சட்டவிரோதமாக அடைக்கலம் கொடுத்தது என மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
பாலியல் வன்புணர்வு சம்பவம் 2020, பிப்ரவரி 21ஆம் தேதி இரவு நடந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட பெண், பெண்களுக்கான சிங்கப்பூர் பராமரிப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடி ராஜ்குமாரிடம் சட்டவிரோதமாக வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
ராஜ்குமாரின் மதுக்கூடத்தில் பராமரிப்பு இல்லத்தில் இருந்த தப்பியோடிய மூன்று பெண்கள் வேலை செய்வதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து பிப்ரவரி 21ஆம் தேதி மதுக்கூடத்தில் காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது ராஜ்குமார் அந்த மூன்று பெண்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அன்றிரவு ஆடவரும் அந்த மூன்று பெண்களும் மது குடித்துள்ளனர்.
மதுபோதையில் இருந்த 17 வயதுப் பெண்ணை ராஜ்குமார் பாலியல் வன்புணர்வு செய்தார்.
இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை அந்தப் பெண் அவரது நண்பரிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அந்தப் பெண் ஜூலை 20ஆம் தேதி பெண்களுக்கான சிங்கப்பூர் பராமரிப்பு இல்லத்தில் மீண்டும் இணைந்தார்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி தாம் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.
அதன்பின்னர் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது 20 வயது. அவரின் விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.
ராஜ்குமார் பாலாவுக்கான தண்டனை மற்றொரு நாள் விதிக்கப்பட்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ராஜ்குமார் மீது 22 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரால் மேலும் 5 பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.