குன்றத்தூர்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மினி லாரியில் கொண்டு செல்லப்பட்ட ஏறக்குறைய 1.5 டன் தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வண்டலூர்-மீஞ்சூர் மேம்பாலம் அருகே வாகனச் சோதனையின்போது தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விமானநிலையத்தில் இருந்து சேமிப்புக் கிடங்கிற்கு தங்கக் கட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், முறையான ஆவணங்கள் இல்லாததால் 1,425 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒருசில நாள்களே எஞ்சியுள்ள நிலையில் இவ்வளவு பெரிய அளவிலான தங்கக் கட்டிகள் பிடிபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாக்காளா்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் கொடுக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.