தெலுக் பிளாங்கா ஹில் பார்க் மரபுடைமைப் பாதையின் சில பகுதிகள் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக ஜூலை 2026 வரையில் மூடப்பட்டிருக்கும்.
தேசிய பூங்காக் கழகத்தின் பூங்காக்களுக்கான குழுமத்தின் இயக்குநர் சுவா யென் லிங், தொடர்ந்து மழை, கனமழை பெய்ததால் 2023 பிப்ரவரி 28ஆம் தேதி பூங்காவின் உயரமான பாதையில் சரிவு ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
இதில் பாதிக்கப்பட்ட பாதைகள் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. ஃபாரஸ்ட் வாக், எர்த் பாதையின் கிழக்குப் பகுதி உட்பட சரிவுகள் சீரமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சரிவானப் பாதையின் நிலைத்தன்மைக்கும் அதனை வலுப்படுத்தவும் பழுதுபார்ப்புப் பணி மிக முக்கியம்,” என்று சுவா மேலும் தெரிவித்தார்.
மரபுடைமைப் பாதைகள் மூடப்பட்ட சமயத்தில் பூங்காவுக்கு வருபவர்கள் தெலுங் பிளாங்கா ஹைட்சில் உள்ள மாற்றுப் பாதையைப் பயன்படுத்தி தெற்கு முகடுகளை ஆராயலாம் என்றார் அவர்.
கடந்த 2023 மார்ச் 1ஆம் தேதி ஃபாரஸ்ட் வாக் பாதையை மூடியதாக தேசிய பூங்காகக் கழகம் முதலில் அறிவித்தது.