தீவு விரைவுச் சாலையில் ஏப்ரல் 24ஆம் தேதி நிகழ்ந்த மோசமான சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர் உயிரிழந்தார்.
அந்த விபத்தில் லாரி மீது அவரது வாகனம் மோதியதாக நம்பப்படுகிறது.
கிராஞ்சி விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்து குறித்து காலை 10.15 மணியளவில் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் கிடைத்துள்ளது.
விபத்து நிகழ்ந்த இடத்திலேயே 26 வயது மோட்டார் சைக்கிளோட்டி இறந்து விட்டதாக குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவ ஊழியர்கள் அறிவித்தனர்.
விபத்துக்குப் பிறகு ஆக்சிடண்ட்.காம் எனும் ஃபேஸ்புக் குழுவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் விரைவுச் சாலையின் மூன்று தடங்கள் மூடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அருகே நீல நிறத்தில் ஒரு கூடாரம் இருந்தது.
காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2023ஆம் ஆண்டில் விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள், மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சென்றவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவங்கள் 44.7 விழுக்காடு அதிகரித்துள்ளன. மொத்தம் 68 பேர் உயிரிழந்ததாக பிப்ரவரியில் காவல்துறை வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரின் மொத்த வாகனங்களில் மோட்டார் சைக்கிள்கள் 15 விழுக்காடு பங்கை மட்டுமே வகிக்கின்றன. ஆனால் 2023ஆம் ஆண்டின் சாலை விபத்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மற்றும் அவற்றில் பயணம் செய்த பயணிகள் தொடர்பானவை.