ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானிசங்கர் நடித்திருக்கும் ‘ரத்னம்’ படம் இன்று வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளிவருகிறது. இது விஷால், ஹரி கூட்டணியில் வெளியாகும் மூன்றாவது படம்.
இந்தப் படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியில் பேசிய விஷால், தன் உடம்பில் 109 தையல் போடப்பட்டதாகக் கூறி தனது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தினார்.
“எனது உடம்பில் 109 தையல்கள் இருக்கின்றன. 100வது தையல் போட்டபோது என் நண்பர்களுக்கு நான் ‘பார்ட்டி’ வைத்தேன். என் உடம்பில் இத்தனை தையல்கள் போடுவதற்கு எனக்கு மிகவும் பிடித்த கனல் கண்ணன் மாஸ்டர்தான் முக்கியக் காரணம்.
“விஷால் சண்டைக்காட்சிகளில் பின்னுகிறார் என ஒவ்வொருத்தரும் சொல்வதற்கான காரணமும் கனல் கண்ணன்தான்.
“அவர் ‘சண்டக்கோழி’ படத்தில் என்னை முழுமையாக நம்பினார். இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சியைப் படமாக்கியபோது எனது அடிதடி காட்சியைப் பார்த்து முதல்முறையாக கனல் கண்ணன்தான் வாயைத் திறந்தார். கிடைத்தான்யா ஒரு ஜாக்கிசான் என மகிழ்ச்சியோடு சொன்னார். அது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது,” என்றார்.
விஷாலின் இந்தப் பேச்சு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அஜித்தின் உடலில் தான் ஏகப்பட்ட தையல்கள் இருக்கும் என திரையுலகில் பேச்சு அடிபடுவது உண்டு.
இப்போது விஷால் உடலில் 109 தையல்கள் என்றால் அவர் அஜித்தையே விஞ்சிவிட்டாரா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.