லண்டன்: காயம் காரணமாக வழக்கமாக விளையாடும் பல ஆட்டக்காரர்களால் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டும் முனைப்புடன் ஆடி தோல்வி அடையாமல் சமநிலை கண்டுள்ளது ஆர்சனல். நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சனலும் ஸ்டோக் சிட்டியும் மோதின. இந்த ஆட்டம் ஸ்டோக் சிட்டியின் பிரிட்டேனியா விளை யாட்டரங்கில் நடைபெற்றது. 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு ஆர்சனல் அங்கு ஒருமுறைகூட வெற்றியைப் பதிவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் மேல் தாக்குதல் நடத்திய ஆர்சனலால் ஒரு கோல் கூட போட முடியாததற்கு ஸ்டோக் சிட்டியின் இளம் கோல்காப்பாளர் ஜேக் பட்லேண்ட் முக்கிய காரணம். வலை நோக்கி ஆர்சனல் ஆட்டக்காரர்கள் அனுப்பிய பந்தை அவர் பாய்ந்து தடுத்தது ஸ்டோக் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது. 22 வயது பட்லேண்ட் எதிர்காலத்தில் இங்கிலாந்துக் குழுவுக்கு விளையாடக்கூடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
ஆர்சனலின் தாக்குதல் ஆட்டக்காரர் ஒலிவியர் ஜிரூ (வலது) வலை நோக்கி அனுப்பும் பந்தைப் பாய்ந்து தடுக்கும் ஸ்டோக் கோல்காப்பாளர் ஜேக் பட்லேண்ட். படம்: ஏஎஃப்பி