ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயம் பெற்ற முன்னள் மாணவர்கள் அடுத்த மாதம் முதல் 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' திட்டத்தின்கீழ் மூன்று பாடங்கள் வரை இலவசமாகப் படிக்கலாம். அந்தப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் 'ஏஎஸ்ஏபி' எனப்படும் முன்னாள் மாணவர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைகிறது.
'ஏஎஸ்ஏபி' திட்டம் 2022ஆம் ஆண்டு மே மாதம் வரை நீடிக்கும் என்று ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி முதல்வர் இயோ லி பியாவ் தெரிவித்துள்ளார். தொழிற்கல்லூரியின் பட்டயமளிப்பு விழாவில் பேசிய திரு இயோ, இந்த வாய்ப்பு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் எனத் தெரிவித்தார்.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி தற்போது கிட்டத்தட்ட 200 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' பாடங்களை வழங்குவதாகத் தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறினார். தொழில்துறைக்கு ஏற்புடைய இந்தப் பாடங்கள் வருங்காலத்தில் தேவைப்படும் புதிய திறன்களில் கவனம் செலுத்தும்.
வாழ்நாள் கற்றல் தனிமனிதருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்தப் பொருளியலுக்கும் உகந்தது என்று பட்டயமளிப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த கல்வி, வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹோங் டாட் தெரிவித்தார்.