ஓமான் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பனாமா, நார்வே நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் கப்பல்களில் நேற்று காலை பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இரு கப்பல்களிலும் தீப்பிடித்தன.
கப்பல்களிலிருந்து எழுந்த அபாய ஒலியைக் கேட்டு அந்த பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை விரைந்து வந்து இரு கப்பல்களிலும் இருந்த 44 பேரை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. வீடியோ ஆதாரங்கள் மூலம் ஈரானுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், ஈரான் இந்தக் குற்றச்சட்டை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் உலகளவில் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு வழி வகுக்கிறது என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 11-ம் தேதி சவூதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் உள்பட நான்கு வெளிநாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. சவூதி அரேபியாவும் சில மத்திய கிழக்கு நாடுகளும் ஈரான் மீது இதே குற்றச்சாட்டை முன்வைத்தன.
ஆனால் ஈரான் இதனை மறுத்துள்ளது.
ஈரான்- அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றநிலை நிலவுகிறது.