தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் தமிழ் முரசின் ஏற்பாட்டில் இடம்பெறும் விசைப் பயிலரங்கின் ஒரு பகுதியாக, எழுத்தாளர் சரவணகார்த்திகேயனின் “தீவிர இலக்கியமும் வெகுசன இலக்கியமும்,” என்ற உரைநிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேசிய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு சரவணகார்த்திகேயன், இலக்கியத்தை பொழுதுபோக்கு இலக்கியம், பண்பாட்டு இலக்கியம், பயன்பாட்டு இலக்கியம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து, அவற்றின் தேவைகளையும் பயன்களையும் விவரித்தார்.
கிட்டத்தட்ட 40 பேர் இந்நிகழ்ச் சியில் கலந்துகொண்டனர்.
வெகுசன இலக்கியத்திற்கும் தீவிர இலக்கியத்துக்கும் இடையிலான இடைநிலை இலக்கியத்தை இன்று ஊடகங்கள் முக்கியமாகப்பயன்படுத்துகின்றன அவர், இத்தகைய எழுத்துகள் வாசிப்பின்பத்தைத் தரும் அதே நேரத்தில், ஆத்ம தரிசனத்தையும் ஓரளவு தருகின்றன என்றார்.
இன்று பொழுதுபோக்குக்காக சமூக ஊடகங்களும் காட்சி ஊடங்களும் மக்களால் நாடப்படுவதால் பொழுதுபோக்க வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது என்ற சரவணகார்த்திகேயன், வெகுசன இலக்கியத்தின் இடத்தை இந்த இடைநிலை இலக்கியம் எடுத்துக்கொண்டது என்றார். இன்று பெரும்பாலான ஊடகங்களில் வெளிவரும் படைப்புகளை இடைநிலை இலக்கியமாக வகைப்படுத்திய அவர், இந்த எழுத்துகள் வளர்வது ஆரோக்கியமான போக்கு எனக் கூறினார்.
அவரது உரையைத் தொடர்ந்து இடம்பெற்ற கேள்வி, பதில் அங்கத்தில் பொன்னியின் செல்வன் எவ்வாறு பொழுதுபோக்கு இலக்கியமாகும் என விளக்கிய சரவணகார்த்திகேயன், பொழுதுபோக்கு இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கி அங்கேயே நின்றுவிடுவதால் எந்த ஆபத்தும் இல்லையென்றார்.
ஒருவருக்கு எது வருகிறதோ, எது ஈர்க்கிறதோ அதையே வாசிப்பதும் எழுதுவதும் நன்று என்றார் அவர்.