ஈராக், சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரும் நோக்கத்தில் சிரியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த தீவிரவாத சிந்தனை கொண்ட இரு சிங்கப்பூரர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இருவரில் ஒருவரான, உரிமம் பெற்ற நாணய மாற்றுக்காரர் குதுப்தீன் ஹாஜா நஜுமுதீன், 36, ஏப்ரல் மாதம் இலங்கையின் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுடன் தொடர்புகொண்டிருந்ததாக அறியப்படுகிறது. இலங்கையின் தீவிரவாத பரப்புரையாளரான சஹாரான் ஹாசிம்மை மூன்று முறை சென்று சந்தித்ததுடன் அவரது குழுவுக்கு நிதி உதவியும் குதுப்தீன் செய்ததாக நம்பப்படுகிறது.
கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
கடந்த 2011 முதல் ஹாஜா சஹாரானின் இணைய உரைகளைக் கேட்டு வந்ததுடன் சமய வழிகாட்டலுக்காக அவருடன் தொடர்ந்து குதுப்தீன் தொடர்பு கொண்டார். 2015 மே மாதத்திற்கும் 2016 அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மூன்று முறை அவர் இலங்கை சென்று சஹாரானைச் சந்தித்துள்ளார்.
எனினும் 250 பேருக்கும் மேற்பட்டோரை பலிவாங்கிய ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த தாக்குதலில் குதுப்தீன் ஹாஜா ஈடுபட்டதற்கோ அல்லது தாக்குதல் குறித்து அறிந்திருந்தார் என்பதற்கோ எவ்வித அறிகுறியும் விசாரணையில் தெரியவரவில்லை என்று அமைச்சு கூறியது.
குதுப்தீன் ஹாஜாவுக்கு ஐஎஸ் மீது 2013ல் ஆர்வம் ஏற்பட்டது. அதன் நோக்கங்களை ஆதரித்ததுடன் ஐஎஸ் தொடர்பான தலையை வெட்டுதல் உட்பட தாக்குதல், வன்செயல் காணொளிகளையும் 2015 பாரிஸ் தாக்குதல் குறித்த பதிவுகளையும் இணையத்தில் தேடி உள்ளார் என்று அமைச்சு கூறியது.
சிரியாவில் ஆயுதமேந்தி போராடும் விருப்பத்தை குதுப்தீன் ஹாஜா கொண்டிருந்தார். 2015 முதல் சிரியா சென்று ஐஎஸ்சில் சேர்வது குறித்து தீவிர ஆய்வை மேற்கொண்டு வந்தார். ஆனால், கொல்லப்படுவோம் அல்லது காயமடைவோம் என்ற பயத்தினால் அங்கு செல்லும் திட்டத்தை அவர்் கைவிட்டார். ஆனாலும் ஐஎஸ் அமைப்புக்கான அவரது ஆதரவு தொடர்ந்தது என்று அமைச்சு குறிப்பிட்டது.
மற்றொருவரான 47 வயது, விநியோக உதவியாளர் சுதர்மன் சமிகின், ஐஎஸ் ஆதரவு ஃபேஸ்புக் குழுவில் சேர்ந்து, இரு ஐஎஸ் ஆதரவாளர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு உதவ முன் வந்தார். அந்த இருவரும் இங்கு வந்து சிரியாவில் சண்டை போடுவதற்கான உபகரணங்களை வாங்க விரும்பினர்.
ஆனால் அது நிறைவேறவில்லை. இருப்பினும் இருவரில் ஒருவருக்கு சிரியாவில் ஆயுதம் ஏந்திய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட நிதியுதவி செய்ய அவர் முன்வந்தார்.
இதற்கு கைமாறாக வெளிநாட்டு ஐஎஸ்ஐஎஸ் குழுவில் சேர சுதர்மனுக்கு இருவரும் அழைப்பு விடுத்தனர். 2014 ஜூலை முதல் 2019 ஜுன் வரை சுதர்மன் போதைப் பொருள் புழங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையிலும் ஐஎஸ்எஸ் தீவிரவாத அமைப்பில் சேர அவர் ஆர்வம் காட்டியதால் சிறையிலிருந்து விடு விக்கப்பட்டவுடன் அவர் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.