பெட்டாலிங் ஜெயா: உலகெங்கிலுமுள்ள சிறு பிள்ளைகளுக்கு உதவ விரும்பும் மலேசியரான குமாரி ஜெருஷா சஞ்சீவி (படம்), அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்துவ உளவியல் ஆலோசனையில் முனைவர் பட்டக்கல்வி படித்துக்கொண்டிருந்தார். ஆனால், இவர் பல மாதங்களாகக் கடுமையான இனவாதக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இதுபற்றி பல்கலைக்கழகத்தின் உளவியல் பிரிவும் எதுவுமே செய்யாத நிலையில், கொடுமையைத் தாங்கமுடியாமல் இவர் 2017ஆம் ஆண்டு தனது 24வது வயதில் உயிரை மாய்த்துக்கொண்டார்.
இப்போது, குமாரி சஞ்சீவியின் குடும்பத்தினர் அமெரிக்காவிலுள்ள யூட்டா மாநிலப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். குமாரி சஞ்சீவி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி பலமுறை புகார் செய்திருந்தும் பல்கலைக்கழகம் எதுவும் செய்யவில்லை என்பதற்காக வழக்கு தொடுக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சீன, இந்தியக் கலப்பினத்தவரான குமாரி சஞ்சீவியின் குடும்பத்தார் மலேசியாவில் வசிக்கின்றனர். அவர்கள் பல்கலைக்கழகத்திடமிருந்து நஷ்டஈடு கோருகின்றனர். எவ்வளவு தொகை கோரப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
குமாரி சஞ்சீவியை மரணத்திற்கு இட்டுச்சென்ற இனவாதக் கொடுமைக்கு எதிராகப் பல்கலைக்கழகத்தின் உளவியல் பிரிவு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இவரது காதலர் மேத்யூ பிரிக் கூறுகிறார்.
குமாரி சஞ்சீவியின் குடும்பத்தின் சார்பில் அவர் வழக்கைத் தொடுத்தார்.மருத்துவ உளவியலில் முதுநிலை பட்டம் பெற்ற குமாரி சஞ்சீவி, உயிரை மாய்த்துக்கொள்வதற்கு எட்டு மாதங்களுக்குமுன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டக்கல்வியைத் தொடங்கினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.