சவூதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெடாவுக்கு அருகில் ஈரானிய எண்ணெய்க்கப்பல் தீப்பற்றி வெடித்துள்ளது. ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பலைப் பயங்கரவாதிகள் தாக்கியிருக்கக்கூடும் என்று ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன.
எண்ணெய்க் கப்பலிலிருந்து கரும்புகை வெளிவந்து கம்பம்போல உயர்ந்து வளர்வதை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட சில படங்கள் காட்டுகின்றன. அந்தக் கப்பலிலிருந்து செங்கடலில் எண்ணெய் பெருமளவு கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதும் கப்பலில் இருந்த பணியாளர்கள் எந்த ஆபத்துமின்றித் தப்பித்துக்கொண்டதாக ஈரான் தெரிவித்தது.
முன்னதாக சூசன்கிரிட் என்ற பெயரைக் கொண்ட இந்தக் கப்பல், ஒரு மில்லியன் கச்சா எண்ணெய்ப் பீப்பாய்களுடன் சிரியாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த மாத பிற்பகுதியில் ஈரானுக்கும் எண்ணெய்க் கப்பல்களுக்கும் தொடர்புடைய சில சம்பவங்கள் நடந்துள்ளன. ஈரானின் எண்ணெய்க்கப்பல் ஒன்று ஜிப்ரால்ட்டார் தீவில் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் பிரிட்டிஷ் கொடியைத் தாங்கிய மற்றோர் எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றியது.