காட்பாடி வள்ளிமலை சாலையில் விடிகே நகரில் உள்ள மாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள 50 ஆண்டு பழமையான மாரியம்மன் கோவிலில் 30 ஆண்டுக்கு முன்பு செய்து வைத்த 150 கிலோ எடைகொண்ட ஐம்பொன் அம்மன் சிலை காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலைச் சுற்றிலும் வீடுகள் உள்ளன. தினமும் வழிபாடுகள் செய்யப்படுவதுடன் அவ்வப்போது அங்கு திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
கோவில் திறந்தே இருக்கும்; இரவு நேரங்களிலும் அதைப் பூட்டுவதில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் கோவிலுக்குள் புகுந்து, ஐம்பொன் சிலையைக் கொள்ளையடித்து சென்றுவிட்டது.
இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி சிலை காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த கோவில் நிர்வாகிகள் போலிசில் புகார் அளித்தனர்.
கொள்ளைபோன சிலையின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்பாடி செங்குட்டையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் ஆயுதங்களுடன் புகுந்து ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டி 28 சவரன் நகையை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
கொள்ளை கும்பல் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளனர். அவர்களை போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கோவிலில் ஐம்பொன் சிலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்பாடியில் வெளியூர் கும்பல் தங்கிருந்து கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவுக் கூறப்படுகிறது. போலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.