போண்டா சாப்பிடும்போது தொண்டையில் போண்டா சிக்கி சென்னையில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு காமராஜர் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன். ராயப்பேட்டையில் உள்ள இரு சக்கர வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி பத்மாவதி. தன் கணவருடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார் 45 வயது பத்மாவதி. இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது.
நேற்று (ஜனவரி 2) பத்மாவதியும் அவரது தாயாரும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு கடையிலிருந்து போண்டா வாங்கி, வீட்டில் வந்து சாப்பிட்டனர்.
பத்மாவதி சாப்பிடும்போது தொண்டையில் போண்டா அடைத்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவசர சிகிச்சை வாகனம் மூலம் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பத்மாவதி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரது உடல் உடற்கூறு சோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் தொடர்பில் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity