அமெரிக்காவின் வெஸ்ட் பசிஃபிக் பகுதியில் உள்ள சைபன் எனும் இடத்துக்குச் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி அவர் கர்ப்பந்தரித்திருக்கிறாரா என்பதைச் சோதித்ததற்கு ஹாங்காங்கைச் சேர்ந்த விமான நிறுவனம் ஒன்று மன்னிப்புக் கோரியுள்ளது.
மறுஆய்வுகளுக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய அந்த நடைமுறையைக் (கர்ப்பச் சோதனை மேற்கொள்வதை) கைவிடுவதாக ஹாங்காங் எக்ஸ்பிரஸ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நார்தன் மரியானா ஐலண்ட்சில் இருக்கும் சைபானுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார் மிடோரி நிஷிடா எனும் 25 வயதுப் பெண்.
அவர் விமான நிலையத்துக்குச் சென்றபோது அவரை கழிவறைக்கு அழைத்துச் சென்ற ஒரு பெண் ஊழியர், கர்ப்பமாக இருப்பதைப் பரிசோதிக்கும் சாதனம் ஒன்றை வழங்கி அதில் சிறுநீர் பரிசோதனையைச் செய்யச்சொன்னார்.
நிஷிடா கர்ப்பமாக இல்லை என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகுதான் அவருக்கு விமானத்தில் ஏறுவதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.
நிஷிடா இணையப்பக்கம் ஒன்றில் இந்தத் தகவலைப் பகிர்ந்திருந்தார். சைபானில் வளர்க்கப்பட்ட நிஷிடா, தனது பெற்றோரைப் பார்க்கச் சென்றிருந்தபோது இந்த அனுபவத்தை எதிர்கொண்டார். அடிக்கடி சைபானுக்குச் சென்றுவரும் நிஷிடா, இத்தகைய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை.
நார்தன் மரியானா ஐலண்ட்ஸ் தீவில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படுவதால், தம் பிள்ளைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வேண்டும் சீனத் தாய்மார் அங்கு பிள்ளை பெற்றுக்கொள்வதுண்டு.
நிஷிடாவின் உடலமைப்பு கர்ப்பிணியைப் போல இருந்ததால் இந்தச் சோதனைக்கு உட்படுத்தியதாக விமான நிறுவன ஊழியர்கள் குறிப்பிட்டனர்.
சைபான் அதிகாரிகளின் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக கர்ப்பப் பரிசோதனையை கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் நடப்புக்குக் கொண்டுவந்ததாக விமான நிறுவனம் தெரிவித்தது.
அந்த விமான நிறுவனத்தை கேத்தே பசிஃபிக் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலையில் வாங்கியது குறிப்பிடத்தக்கது. புதிய நிர்வாகத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட மறுஆய்வுக்குப் பிறகு கர்ப்ப பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சோதனைகளின் மூலம் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக்கோருவதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
#தமிழ்முரசு #விமான #கர்ப்பபரிசோதனை