தனது வருமானம் குறித்த விவரங்களை மறைத்ததாக எழுந்த சந்தேகத்தையடுத்து, நடிகர் ரஜினிகாந்திடம் நடத்தப்பட இருந்த விசாரணையை வருமான வரித்துறை கைவிட்டுள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தாம் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலைச் செய்து வந்ததாக ரஜினி தெரிவித்துள்ளார் எனவும் அந்த ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2002-03 மற்றும், 2004-05 ஆகிய இரு நிதியாண்டுகளுக்கான வருமானவரியை செலுத்தியபோது, தனது வருமானம் குறித்த சில விவரங்களை ரஜினி மறைத்துவிட்டதாக வருமான வரித்துறைக்குச் சந்தேகம் எழுந்தது. அச்சமயம் அவர் தனக்கு நெருக்கமான சிலருக்கு நட்பின் அடிப்படையில் கடன் கொடுத்திருந்தார்.
கோபாலகிருஷ்ண ரெட்டி என்பவருக்கு ரூ.1.95 கோடியும் அர்ஜுன்லால் என்பவருக்கு ரூ.60 லட்சமும் கடனாகக் கொடுத்துள்ளார் ரஜினி. மேலும் சிலருக்கும் வெவ்வேறு தொகையை அவர் கடனாக அளித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் 2004-05ஆம் ஆண்டு ரூ.1.71 கோடியை வாராக்கடனாக தாம் தள்ளுபடி செய்துவிட்டதாகவும், இதனால் தனக்கு ரூ.33.93 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும் வருமான வரித் துறையிடம் ரஜினி தெரிவித்தார்.
இதையடுத்து வாராக் கடனுக்கான ஆதாயத்தைப் பெறுவதற்காகவே தாம் கடன் கொடுக்கும் தொழிலைச் செய்து வந்ததாக ரஜினிகாந்த் சொல்லியிருக்கக்கூடும் என்று வருமான வரித்துறைக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து 2005ஆம் ஆண்டு அவரிடம் வருமான வரித்துறை இது தொடர்பாக விசாரணை நடத்தியது.
தொடக்கத்தில் தாம் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலைச் செய்யவில்லை என்றும் நண்பர்களுக்கு நட்பு ரீதியில் கடன் கொடுத்ததாகவும் தெரிவித்தார் ரஜினி. எனினும் பின்னர் வருமான வரித்துறைக்குக் கடிதம் எழுதிய அவர், தாம் தவறான விளக்கத்தை அளித்ததாகவும், தாம் செய்வது கடன் கொடுக்கும் தொழில்தான் என்று புரிய வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து ரஜினிகாந்த்துக்கு எதிரான விசாரணையை வருமான வரித்துறை கைவிட்டுள்ளது.
முன்னதாக வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திடம் முறையிட்ட ரஜினி, கடன் கொடுத்ததன் மூலம் தமக்கு வந்த வருமானத்தைத் தொழில் மூலம் கிடைத்த வருமானமாகவே கருத வேண்டும் என கடந்த 2009ஆம் ஆண்டு உத்தரவு பெற்றுள்ளார். மேலும் தீர்ப்பாயம் அனுமதித்ததன் பேரில் வாராக் கடன்களுக்கும் உரிமை கோரியுள்ளார் ரஜினி.
இந்நிலையில் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலைச் செய்ததாக ரஜினி கூறியிருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டுள்ளனர்.
#ரஜினிகடன்தொழில் #தமிழ்முரசு