கேரள மாநிலம் மலப்புரம் அடுத்த திரூர் அருகே உள்ள தரம்மல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரபீக்-சப்னா தம்பதியர். கடந்த புதன்கிழமை காலை இவர்களது 3 மாதக் குழந்தை திடீரென உயிரிழந்தது. பிரேதப் பரிசோதனை செய்யாமல் காலை 10 மணியளவில் உடலை வீட்டின் அருகில் புதைத்தனர்.
குழந்தை உயிரிழந்த பின் பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்வதை அறிந்த ரபீக்கின் பக்கத்து வீட்டுக்காரர்கள் இதில் சந்தே கமடைந்து போலிசில் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலிசார் புகாரின் அடிப்படையில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவர்கள் கொடுத்துள்ள முதல்கட்ட அறிக்கையின்படி, குழந்தையின் மரணத்தில் இயற்கைக்கு மாறாக எதுவும் இல்லை என்றும், எந்தவொரு தாக்குதலையும் குறிக்கும் வகையில் உடலில் எந்த அடையாளங்களும் இல்லை என்றும், மேலும் விஷம் உட்கொண்டதற்கான அறிகுறிகளும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், குழந்தையின் உள் உறுப்புகள் விரிவான பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்று கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த முடிவுகள் கிடைத்தவுடன்தான் மரணம் குறித்த கூடுதல் தெளிவு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ரபீக்-சப்னா இருவருக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பின் இந்த 9 ஆண்டுகளில் அவர்களுக்கு இப்போது இறந்த குழந்தையுடன் சேர்த்து ஆறு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இவற்றில் 3 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள். ஆனால், இவர்களில் யாருமே இப்போது உயிருடன் இல்லை.
ஒரே ஒரு பெண் குழந்தையைத் தவிர்த்து மற்ற குழந்தைகள் அனைத்தும் முதல் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு முன்பாகவே மரணமடைந்துவிட்டனர். அந்த ஒரு பெண் குழந்தை மட்டும் 4 வயதுக்குப் பின்னர் இறந்தது.
இதற்கிடையே, ரபீக்கின் உறவினர்கள் இதுதொடர்பாகப் பேசுகையில், ``குழந்தைகளின் மரணத்தில் சந்தேகப்பட எதுவும் இல்லை. குழந்தைகளின் இறப்புக்கு மரபணு நோய் காரணமாக இருக்கலாம் என்று ஏற்கெனவே மருத்துவர்கள் கூறியுள்ளனர்,” என்றனர்.
#கேரளா #தமிழ்முரசு