சிங்கப்பூரில் புதிதாக 13 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (மார்ச் 6) உறுதி செய்யப்பட்டது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில், சிங்டெல் ஊழியரும் ஒருவர் என்று கூறப்பட்டது.
புதிதாக கிருமி தொற்றியவர்களில் 9 பேர் பிப்ரவரி 15ஆம் தேதி சஃப்ரா ஜூரோங் கிருமித்தொற்று வட்டாரத்துடன் தொடர்புடையவர்கள்.
புதிதாக கிருமி தொற்றியவர்களில் ஒருவர் முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்.
புதிதாக கிருமி தொற்றியவர்களில் மற்றொருவர் முன்பு பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்.
இருவர் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சிப்பந்தி. தென்னாப்பிரிக்காவிற்கும் ஃபிரான்ஸிற்கும் அண்மையில் சென்றுவந்துள்ளார். மற்றொருவர் ஜெர்மனி சென்று திரும்பியவர்.
கிருமித்தொற்று கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் முயற்சி தொடர்கிறது.
அதே சமயம், கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து ஒருவர் வீடு திரும்பியதாகவும் அமைச்சு கூறியது. இவர்களையும் சேர்த்து, இதுவரை 82 பேர் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகியோ, மேம்பட்டோ வருகிறது.
9 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
#கொவிட்-19 #கொரோனா #சிங்கப்பூர்