கொவிட்-19: 2வது உதவித் திட்டத்திற்கு நிதியிருப்பைப் பயன்படுத்த அதிபர் ஒப்புதல்
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவலைச் சமாளிக்க உதவும் இரண்டாவது உதவித் திட்டத்திற்காக குடியரசின் நிதியிருப்பைப் பயன்படுத்த அதிபர் ஹலிமா யாக்கோப் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னெப்போதும் எதிர்பார்க்கப்படாத நெருக்கடிநிலையை சிங்கப்பூர் எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
அதிபர் ஹலிமாவின் சார்பில் அவரது உரையை நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் இன்று நாடாளுமன்றத்தில் வாசித்தார்.
2009ஆம் ஆண்டில் உலக நிதி நெருக்கடிநிலை ஏற்பட்டபோது, நிதியிருப்பிலிருந்து $4.9 பில்லியனைப் பயன்படுத்த அப்போதைய அதிபர் எஸ்.ஆர்.நாதன் ஒப்புதல் அளித்திருந்தார்.
இத்தகைய சூழலில், மீண்டும் இருப்பிலிருந்து நிதியைப் பயன்படுத்த அதிபர் ஹலிமா ஒப்புதல் அளித்துள்ளார்.
2009 நிதி நெருக்கடியைவிடவும் ‘சார்ஸ்’ தொற்றுநோயின்போது ஏற்படுத்திய பொருளியல் பாதிப்புகளைவிடவும் இப்போதுள்ள நிலைமை மேலும் கடுமையானதாகவும் நீண்டகாலம் நீடிக்கக்கூடியதாகவும் இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.