என்யுஎஸ் மாணவர்கள் 14 பேருக்குக் கிருமித்தொற்று
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) மாணவர்கள் 14 பேரைக் கொரோனா கிருமி தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த 14 பேரும் வெளிநாடு சென்று திரும்பியவர்கள்.
கடந்த மாதம் 28ஆம் தேதி சனிக்கிழமை இரவு சிங்கப்பூர் திரும்பிய அவர்களுக்கு 14 நாட்கள் வீட்டிலேயே இருப்பதற்கான ஆணை வழங்கப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் விமான நிலையத்தில் இருந்து நேரடியாகத் தங்களது வீடுகளுக்கு அல்லது ஹோட்டல்களுக்குச் சென்றதாக இணைப் பேராசிரியர் லியோங் சிங் தெரிவித்தார்.
மார்ச் 26ஆம் தேதியில் இருந்து, அமெரிக்கா அல்லது பிரிட்டனில் இருந்து நாடு திரும்பும் உள்ளூர்வாசிகள் அனைவரும் தங்களது வீடுகளில் இல்லாமல் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக இடங்களில் 14 நாள் இல்லத் தடுப்பு ஆணை கடமையை நிறைவேற்ற வேண்டும்.
தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 1,400 மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும் அவர்களுள் 93 பேர் கடந்த இரு வாரங்களில் சிங்கப்பூர் திரும்பியதாகவும் திருவாட்டி லியோங் குறிப்பிட்டார்.
எஞ்சிய மாணவர்கள் இவ்வாரம் நாடு திரும்பியதும் இல்லத் தடுப்பு ஆணையின்கீழ் வைக்கப்படுவர் என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே, இல்லத் தடுப்பு ஆணையை மீறிவிட்டதாக தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான காணொளிச் சான்றையும் பல்கலைக்கழகம் வழங்கி இருக்கிறது.
#NUS #மாணவர்கள் #கொவிட்-19