கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு முயற்சியாக சிங்கப்பூரில் உள்ள 25 பொது நூலகங்களும் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) முதல் மே 4 வரை மூடப்பட்டிருக்கும் என்று தேசிய நூலக வாரியம் அறிவித்து உள்ளது.
சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகக் கட்டடமும் முன்னாள் ஃபோர்ட் தொழிற்சாலை கட்டட அருங்காட்சியகமும் இக்காலக்கட்டத்தில் மூடியிருக்கும் என்றும் இன்று (ஏப்ரல் 4) வெளியிட்ட அறிக்கையில் வாரியம் குறிப்பிட்டு உள்ளது.
உள்ளூரில் கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து நூலகங்களை மூடிவைக்கும் முடிவை வாரியம் எடுத்துள்ளது.
புத்தகங்களை திரும்பக் கொடுத்தல், பெட்டகங்களுக்குப் பதிவு செய்தல் போன்ற நூலகங்களின் நேரடிச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. புத்தகங்களைத் திருப்பிக் கொடுப்பதற்கான காலக்கெடு, நூலகங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்படும். எனவே காலங்கடந்ததற்காக அபராதம் எதுவும் வசூலிக்கப்படாது என்பனவும் தேசிய நூலக வாரியத்தின் அறிவிப்புகள்.
இருப்பினும், தனது மின்னிலக்கச் சேவைகள், இணையத்தளத்திலும் கைபேசிச் செயலியிலும் தொடர்ந்து கிடைக்கும் என்று அது கூறியுள்ளது.
#சிங்கப்பூர் #கொவிட்-19 #நூலகம்