2, தெம்பனிஸ் பிளேஸ் எனும் முகவரியில் செயல்படும் தெம்பனிஸ் தங்கும் விடுதி, தனிமைப்படுத்தப்பட்ட ஐந்தாவது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தங்கும் விடுதியைச் சேர்ந்த 38 பேரை இதுவரை கிருமி தொற்றியதை அடுத்து, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் அவ்விடுதி தனிமைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று (ஏப்ரல் 9) அறிவித்தார்.
சுங்கை தெங்கா, பொங்கோல் எஸ்11, தோ குவான், வெஸ்ட் லைட் தோ குவான் ஆகியவை ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மற்ற நான்கு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள்.
இதையடுத்து, இந்த ஐந்து விடுதிகளைச் சேர்ந்த ஊழியர்களும் 14 நாட்களுக்குத் தங்களது அறைகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
எஸ்11 தங்கும் விடுதியைச் சேர்ந்த 166 பேர் உட்பட வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் மட்டும் 202 பேரைப் புதிதாக கிருமி தொற்றியது நேற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்றுப் பிரச்சினையைக் கையாள்வதற்காக தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் டியோ சீ ஹியன் தலைமையில் அமைச்சுகள் நிலை சிறப்புப் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஆயுதப் படையும் போலிஸ் படையும் அங்கு நடவடிக்கைகளை அமல்படுத்த உதவியாக இருக்கும்.