கொரோனா கிருமித் தொற்று பாதிப்பைத் தவிர்க்க வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. மேலும், திரைக்கலைஞர்களும் இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் காணொளி வெளியிட்டும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சசிகுமார் ஒருபடி மேலே சென்று காவல்துறையினருடன் நேரடியாக களமிறங்கி தன் பங்களிப்பைச் செய்துள்ளார்.
அண்மையில் அவர் மதுரையில் போலிசாருடன் இணைந்து தன்னார்வலராகச் செயல்பட்டார். போலிசாருடன் சேர்ந்து சாலைப் போக்குவரத்தைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டவர் பொதுமக்களுக்கு மத்தியில் சில வார்த்தைகள் பேசினார்.
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று வலியுறுத்திய அவர், அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று அரசு கூறிய பிறகும் பலர் அத்துமீறுவது தவறு என்றார்.
“அனைவருமே வீட்டில் இருங்கள். நல்லதுக்குத் தான் சொல்கிறார்கள். “நாம் முதலில் தேவையின்றி வெளியே வருவதை நிறுத்த வேண்டும். கோடை வெயிலில் எவ்வளவு பேர் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.
“காவல்துறையினர் ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். கடந்த இரு தினங்களாக நான் இதை நேரடியாகப் பார்க்கிறேன். வெளியே கிடைப்பதைச் சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்குப் போகாமல் இருக்கிறார்கள்,” என்று சசிகுமார் பேசியுள்ளார்.
பெண் காவலர்கள் தாங்கள் செய்வதைப் பணியாக கருதாமல் நாட்டின் நன்மைக்காகவும் மக்களின் பாதுகாப்புக்காகவும் ஆத்மார்த்தமாகச் செயல்படுவதாக அவர் பாராட்டினார்.
“அப்படியானால் நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என யோசித்துப் பாருங்கள். பெண்கள் சிலர் கைக்குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கக் கூட அஞ்சுகிறார்கள். தன்னை நோக்கி ஓடிவரும் குழந்தையைத் தொட்டால் அதற்கு ஏதேனும் நோய்த்தொற்று வந்துவிடுமோ என்ற பயம் தாய்மார்களுக்கு இருக்கிறது.
“அனைத்தையும் மீறி அவர்கள் நம் வீட்டுக் குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். எனவே நிஜ கதாநாயகர்கள் என்றால் அவர்கள்தான். ஆகையால் நாமும் பாதுகாப்பாக இருப்பதுடன் மற்றவர்களையும் பாதுகாப்பாக இருக்கச் செய்வோம்,” என்று சசிகுமார் தெரிவித்தார்.
காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட அனைவருமே மிகவும் சிரமப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், போலிசார் சொல்வது போல் வீட்டுக்குள் இருப்பதும் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதும் அவசியம் என்றால் அதைச் செய்துதான் ஆகவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களுக்காக ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்துவது சரியல்ல என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கை கடுமையாக கடைப்பிடித்தால் அடுத்த பத்து தினங்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
“ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா தொற்று மேலும் அதிகமாகி, விளைவுகளை நம்மால் சந்திக்க முடியாது. பெரிய மருத்துவ வசதி உள்ள அமெரிக்கா போன்ற நாடுகளே சமாளிக்க முடியவில்லை. இதை மனதிற்கொள்ள வேண்டும்,” என்று சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் நடிகர் பார்த்திபன் மேலும் தெரிவித்துள்ளார்.