இந்திய நாட்டைச் சேர்ந்த அமன்தீப் கோர் செங்காங்கில் உள்ள ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலையைத் தொடங்கிய நாளிலேயே அவருக்கு அடி உதை விழுந்தது. 2016 நவம்பர் 9ஆம் தேதி ரிவர்வேல் கிரசென்ட்டில் உள்ள வீவக புளோக்கின் நான்காவது மாடியில் உள்ள வீட்டில் வேலைக்குச் சேர்ந்த அவர் நவம்பர், டிசம்பர் ஆகிய இரு மாதங்களும் அவரது முதலாளி தம்பதியினரால் துன்புறுத்தப்பட்டதாக நேற்று (ஜூன் 9) நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது 27 வயது ஆன அமன்தீப்பின் வேலைகள் தாங்கள் எதிர்பார்த்ததுபோல இல்லை என்று கருதிய ஃபர்ஹா டெசீனும் அவரது கணவர் முகம்மது தஸ்லீமும் அப்பெண்ணை தாக்கியதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த இரு மாதங்களிலும் அப்பெண்ணை ஃபர்ஹா திரும்பத் திரும்ப அடித்து தாக்கியதாகவும் இரு வெவ்வேறு வேளைகளில் தஸ்லீமும் அவரை குத்தியதாகவும் எட்டி உதைத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலில் ஈடுபட்ட ஒன்பது குற்றச் சம்பவங்களிலும் குற்றவியல் மிரட்டல் புரிந்த ஒரு குற்றத்திலும் ஃபர்ஹா ஈடுபட்டதாக நீதிமன்றம் கண்டறிந்தது.
அவரது கணவரும் இரு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதாக அறிந்த நீதிமன்றம் தம்பதியரை குற்றவாளிகள் என்று அறிவித்தது. அவ்விருவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள். இவர்களுக்கான தண்டனை ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“வார நாட்களில் அதிகாலை 3 மணிக்கு உறங்கச் செல்லும் பணிப்பெண் சுமார் இரண்டு மணி நேரத்தில் எழுந்திட வேண்டும். வார இறுதி நாட்களில் காலை 7.30 மணிக்கு எழுவார்,” என அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கினார்.
துன்புறுத்தலைப் பொறுக்க இயலாத அமன்தீப் அந்த வீட்டிலிருந்து தப்ப முடிவெடுத்ததாகவும் வீட்டு சாவி இல்லாததால் வரவேற்பறை சன்னல் வழியாக ஏறிக் குதித்து வெளியேற முயன்றபோது அங்கு சாய வேலை செய்துகொண்டிருந்த மணி மனோகரன் என்னும் வெளிநாட்டு ஊழியர் அவர் வெளியேற உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டது.