வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் 'டிரேஸ் டுகேதர்' செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்
தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூன் 19) தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் செயலியைப் (டிரேஸ் டுகேதர்) பதிவிறக்கம் செய்து அதைச் செயல்பாட்டு நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறியுள்ளது.
கட்டுமானத் துறை, கடல்துறை உள்ளிட்ட தொழில்துறைகளில் வேலை செய்யும் எஸ்-பாஸ், வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.
இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கான அவசியம் குறித்து கடந்த மே 27ஆம் தேதி அமைச்சு முதலில் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, இப்போது முதலாளிகளுக்கு இதுகுறித்து அமைச்சு நினைவுபடுத்தியுள்ளது.
வெளிநாட்டு அடையாள அட்டை எண் அல்லது வேலை அனுமதி அட்டை எண்ணைக் கொண்டு ‘டிரேஸ் டுகேதர்’ செயலியில் பதிவு செய்வதற்கான காலக்கெடு வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி.
இங்குள்ள 40 தங்கும் விடுதிகளைச் சேர்ந்த சுமார் 5,500 வெளிநாட்டு ஊழியர்கள் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையிலிருந்து வேலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online