சென்னை: கொரோனா கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து கிருமித் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது கடைப்பிடிக்கப்படும் தளர்வு, கட்டுப்பாடுகளுடன் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக நேற்று முன்தினம் இரவு அரசு அறிவித்தது.
சிகிச்சைக்குப் பின் குணமடைவோர் விகிதம் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம் என்றும் தமிழகத்தில்தான் நோய்த்தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகக் குறைவாக உள்ளது என்றும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை மாதம் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவுதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் ஜூலை 15ஆம் தேதி வரை பேருந்து போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை, மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 1,141 ஆக உள்ளது. இதுவரை 47,749 பேர் குணமடைந்துள்ள நிலையில் சுமார் 37 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.