சிங்கப்பூரில் காலை 8 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது.
நண்பகலுக்குள் சுமார் 840,000 பேர் அதாவது 31 விழுக்காட்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் துறை தெரிவித்தது.
வாக்காளர்கள் வீட்டிலிருந்து கிளம்பும் முன், அவர்களது வாக்களிப்பு நிலையங்களில் கூட்ட நிலவரம் பர்றி அறிந்துகொண்டு செல்லுமாறு தேர்தல் துறை வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
காலை 8 மணி முதல் 12 மணி வரை 65 அல்லது அதற்கு அதிகமான வயதுடைய மூத்தோருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
மரின் பரேட் குழுத்தொகுதியைச் சேர்ந்த சிராங்கூன் அவென்யூ 2ல் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த 93 வயதான திரு சங்குனி முனியாண்டி, வாக்களிக்க காலை 8.05 மணியளவில் சென்றபோது சுமார் 20 பேர் அங்கு வரிசையில் இருந்ததாகக் கூறப்பட்டது. சுமார் 30 நிமிடங்களில் வாக்களித்து முடித்த அவர், இந்த முறை வாக்களிப்பு நடைமுறை முந்தைய ஆண்டுகளை விட சிறப்பாக இருந்ததாகக் கூறினார். அவருடன் அவரது மனைவியான 83 வயது முத்தம்மா சின்னப்பனும் வாக்களிக்கச் சென்றிருந்தார்.
காலை 8.25 மணியளவில் சுங் செங் ஹை பள்ளியில் வாக்களிக்கச் சென்ற திரு கண்ணப்பன், 86 மற்றும் அவரது மனைவி திருமதி கார்த்தி, 70 ஆகியோர், வாக்களிப்பு நடைமுறையை முடிக்க சுமார் 10 நிமிடங்கள் எடுத்ததாகக் கூறினர்.
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வாக்களிப்பு நிலையங்களில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் சிறப்பாக இருப்பதாக வாக்காளர்கள் சிலர் தெரிவித்தனர். இந்த ஏற்பாடுகளால் பாதுகாப்பாகவும் வசதியாகவும் உணர்ந்ததாக 75 வயதான திரு லோ பூன் ஹுவான் தெரிவித்தார்.
11 கட்சிகள், ஒரு சுயேச்சை வேட்பாளருடன் 93 இடங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்தத் தேர்தலில் மொத்தம் 17 குழுத்தொகுதிகள், 14 குழுத்தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இரவு 8 மணிக்குப் பிறகு வாக்குச்சீட்டு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலக் குறைவுடையோர், இல்லத் தனிமை ஆணை பெற்றோர் போன்றவர்கள் இரவு 7 முதல் 8 மணி வரையிலான சிறப்பு நேரத்தில் வாக்களிக்கலாம்.