கொவிட்-19 கிருமித்தொற்று சிங்கப்பூர் எழுச்சியை மறுஉறுதிப்படுத்தி இருக்கிறது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்தார். அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி உரையாற்றிய அதிபர், ஒரே மக்கள் என்ற முறையில் சிங்கப்பூரர்களின் மீள்திறனை அது மறுஉறுதிப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
“கொவிட்-19 நெருக்கடியின்போது நாம் ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து ஒற்றுமையைப் புலப்படுத்தி இருக்கிறோம். இது எனக்கு பெருமையாக இருக்கிறது.
“இதே போல புதிய அரசாங்கத்தின் பின்னணியில் முழுவதுமாக திரண்டு சிங்கப்பூர் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வர சிங்கப்பூரர்கள் ஐக்கியமாக ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி அரசாங்கம் நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டது.
இஸ்தானாவில் நடந்த அந்த நிகழ்ச்சியில் அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தினர்களும் அமைச்சர்களும் கலந்துகொண்டார்கள்.
அந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற இல்லத்திற்கான காணொளித் தொடர்பும் உள்ளடங்கி இருந்தது.
நாடாளுமன்ற இல்லத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் அமைச்சர்களும் விருந்தினர்களும் பாதுகாப்பான நியதிகளைக் கடைப்பிடித்து கலந்துகொண்டனர்.