மனைவியின் மீதான அன்பின் வெளிப்பாடாக, 100 ரிங்கிட் நோட்டுகளால் 99 ‘ரோஜா’ செண்டுகளாகச் செய்து அவற்றினாலான பூங்கொத்தைப் பரிசாக அளித்திருக்கிறார் ஜோகூர் பாரு ஆடவர் ஒருவர்.
மொத்தம் 495 நோட்டுகளை 99 ‘ரோஜா’ செண்டுகளாக உருவாக்க ஆறு பேர் மூன்று நாட்களுக்குப் பணிபுரிய வேண்டியிருந்தது என்று ஸ்கூடாயில் கடை வைத்துள்ள அந்த பூச்செண்டு கடைக்காரரான லியூ வான் லிங் தெரிவித்தார். ஒவ்வொரு பூச்செண்டுக்கும் ஐந்து 100 ரிங்கிட் ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டன.
ஒரு மீட்டர் உயரம், ஒரு மீட்டர் விட்டம், 3 கிலோ எடையுள்ள அந்த பூங்கொத்து விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
30களில் இருக்கும் ஒரு வர்த்தகர் தமது மனைவியின் பிறந்தநாளுக்காக அந்த பூங்கொத்தைப் பரிசளிக்க விரும்பினார்.
அந்தப் பூங்கொத்தை செய்வதற்காக 3,000 ரிங்கிட் கட்டணம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 சூழலில் பிரிந்திருப்போர் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரூபாய் நோட்டுகளைக்கொண்டு பூங்கொத்து செய்து வழங்குவது தற்போது 20% அதிகரித்திருப்பதாக கடைக்காரர் வான் லிங் குறிப்பிட்டார்.
இருந்தாலும் அந்தக் கடையில் இதுவரை செய்யப்பட்ட ‘பண நோட்டு’ பூங்கொத்துகளில் இதுவே ஆக அதிக மதிப்பிலானது என்பது குறிப்பிடத்தக்கது.