கொவிட்-19 நெருக்கடிநிலையால் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீடு இல்லாதோருக்காக சிங்கப்பூரில் உள்ள 21 தற்காலிக வசிப்பிடங்களில் இருக்கும் அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன.
அங்கு காலி இடங்கள் இல்லை. அங்கு தற்காலிகமாக வசிக்க காத்திருப்போர் பட்டியலில் ஏறத்தாழ 100 பேர் உள்ளனர்.
இந்த தற்காலிக வசிப்பிடங்களை சமூக மற்றும் சமய அமைப்புகள் நடத்தி வருகின்றன.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது, குறிப்பாக கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடப்பில் இருந்தபோது தற்காலிக வசிப்பிடங்களுக்குச் செல்லுமாறு வீடுகள் இல்லாமல் பொது இடங்களில் தூங்கிக்கொண்டிருந்தோரிடம் தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் பொதுவாக குடியிருப்புக் கட்டடங்களின் தரைத்தளங்கள், வேலையிடங்கள் போன்ற இடங்களில் தங்கினர்.
ஆனால் கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது இத்தகைய இடங்களில் தங்க தடை விதிக்கப்பட்டது.
பொருளியல் மந்தநிலை காரணமாகவும் வீடு இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கூறியது.