உலக அளவில் ஃபைசர் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்ட முதல் நபர் பிரிட்டனைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி மார்கரட் கீனன்.
பரிசோதனையில் பங்கேற்பவர்கள் தவிர, முதல் முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் இவர்.
மத்திய இங்கிலாந்தின் கோவென்ட்ரியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு இன்று (டிசம்பர் 8) காலை 6.31 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.31) அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இன்று முதல் ஃபைசர், பையோஎன்டெக் தயாரிப்பான கொவிட்-19 தடுப்பு மருந்து பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தொடங்கியுள்ள முதல் மேற்கத்திய நாடு இது. 1.5 மில்லியனுக்கும் அதிகமானோரைப் பலிகொண்ட கொரோனா தொற்று நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படும் இந்தத் தடுப்பு மருந்தை மிகக் குறைந்த வெப்பநிலையில் வைக்க வேண்டிய கட்டாயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபர் என்பதில் பெருமைகொள்வதாக 90 வயதான திருவாட்டி கீனன் தெரிவித்துள்ளார்.