மனிதவளத் துறையில் மேலாளர் வேலைகள் சிலவற்றை வரும் காலத்தில் ரோபோக்கள் எனப்படும் இயந்திர மனிதர்கள் ஏற்று நடத்தும் காலம் வரலாம் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
மனிதவள அமைச்சும் ‘இன்ஸ்டிடியூட் ஃபார் ஹியூமன் ரிசோர்ஸ் புரபஃபெஷனல்ஸ்’ எனப்படும் மனிதவள நிபுணத்துவக் கழகம் ஒன்றும் இணைந்து ஆலோசனை நிறுவனமான வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் மூலம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
அதன்படி, மனிதவளத் துறையின் 27 பணிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அடுத்த மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகாலகட்டத்தில் பல்வேறு நிலைகளில் ெதாழில்நுட்பத்தின் தாக்கம் இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது.
நேற்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முடிவிலிருந்து, மனிதவளத் துறையின் எட்டு பணிகள் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது.
இவை யாவும் கீழ்நிலையிலுள்ள திறன் நிர்வாகம், திறன் மதிப்பீடு அதற்கேற்ற சன்மானம், ஆகியவற்றுடன் நிறுவன மேம்பாடு போன்ற பிரிவுகளில் தொழில்நுட்பத்தின் பாதிப்பு தெரிய வரலாம் என்று கூறப்படுகிறது.
அதற்குக் காரணம், இயந்திர மனிதத் துறையில், நடைமுறைகளைத் தானியக்கமயமாக்குவது, இயந்திரக் கல்வி முறை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்றும் விளக்கமளிக்கப்படுகிறது.
இதில் மீதமுள்ள 16 பணிகள் மேலாளர் அல்லது தலைமைத்துவ பிரிவு தொடர்பானவை.
இவை தொழில்நுட்பம் மூலம் மேம்பாடு காணும் என்பதால் இவற்றில் பணிபுரிவோர் அதற்கேற்றவாறு தரவு பகுப்பாய்வு திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதில் தானியக்க முறையினால் பெரிய அளவு பாதிப்பு இல்லாத வேலைகளைக் கூறவேண்டும் என்றால் அவை, திறனாளர் நிர்வாகத் தலைமைப் பொறுப்பிலிருப்பவர், மனிதவள வர்த்தக பங்காளித்துவ பொறுப்பில் இருப்பவர், நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த மேலாளர் பொறுப்பில் இருப்பவர் ஆகியவையே.
இந்நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதவளத் துறையில் புதிய வேலைகள் உருவாகும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. இவை மனிதவள தரவு பகுப்பாய்வாளர் பொறுப்பிலிருப்பதுபோல் அதிக திறன் தேவைப்படும் பணிகள் என்று ஆய்வு கோடி காட்டுகிறது.
சிங்கப்பூரில் மனிதவள நிபுணர் களாக கிட்டத்தட்ட 48,000 பேர் உள்ளனர். இவர்களில் 90 விழுக்காட்டினர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.