சிங்கப்பூரில் 70 வயதும் அதற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் இம்மாதம் 27ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முதற்கட்டமாக, மூத்த குடிமக்கள் அதிகளவில் வசிகும் அங் மோ கியோ, தஞ்சோங் பகார் வட்டாரங்களில் முன்னோட்டச் சோதனைகள் இடம்பெறும்.
அவ்விரு வீடமைப்புப் பேட்டைகளிலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி 5,000 முதல் 10,000 வரையிலான மூத்த குடிமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.
அடுத்த மாதம் 1ஆம் தேதிக்குள் தெக் கீ சமூக மன்றத்திலும் தஞ்சோங் பகார் சமூக மன்றத்திலும் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்படும்.
ஆயினும், பலதுறை மருந்தகங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் அங் மோ கியோ, தஞ்சோங் பகார் வட்டாரங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் நாளை மறுநாள் திங்கட்கிழமையில் இருந்து முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அமைச்சர் கான் கூறியிருக்கிறார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு இணையம் வழியாக அல்லது அருகிலுள்ள சமூக மன்றங்களுக்குச் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மக்கள் கழகத் தொண்டூழியர்களும் மூத்தோர் தலைமுறைத் தூதர்களும் வீடுகளுக்கு நேரில் சென்றும் அடித்தள நிகழ்ச்சிகள் மூலமாகவும் தடுப்பூசி தொடர்பான ஐயங்களைத் தீர்த்து வைப்பர். தேவைப்பட்டால், மூத்த குடிமக்கள் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துகொள்ளவும் அவர்கள் உதவுவர்.
தடுப்பூசி நடவடிக்கை குறித்த தகவல் ஏடுகள் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும். கூடுதல் உதவி தேவைப்பட்டால் அவர்கள் சுகாதார அமைச்சின் நேரடித் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இது தொடர்பான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய அச்சுப் பிரதியை நாடுங்கள்!