ஒவ்வாமை போன்ற காரணங்களால் சிங்கப்பூரில் ஒரு விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி மறுப்பு
சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தோரில் கிட்டத்தட்ட ஒரு விழுக்காட்டினருக்கு ஒவ்வாமை, தடுப்பூசிக்குத் தகுதிபெறா நிலைமை போன்ற காரணங்களால் தடுப்பூசி மறுக்கப்பட்டது.
கடந்த 30 நாள்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்தோரில் ஏறத்தாழ 98 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்; இரண்டு விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரவில்லை.
தடுப்பூசி மறுக்கப்பட்டவர்களின் விகிதம், தடுப்பூசி விரயத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் தொடர்பில் பாட்டாளிக் கட்சியின் தலைவர் சில்வியா லிம் நாடாளுமன்றத்தில் இன்று (ஏப்ரல் 5) கேட்டார். அதை அடுத்து, சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
முன்பதிவு செய்துகொண்டபடி தடுப்பூசி போட்டுக்கொள்ள வராதோர் அல்லது ஒவ்வாமை போன்ற காரணங்களுக்காக தடுப்பூசி மறுக்கப்பட்டோர் போன்றவற்றால் தடுப்பூசி எதுவும் விரயமாகவில்லை என்று டாக்டர் ஜனில் கூறினார்.
“முன்பதிவு செய்துகொண்டோர் எண்ணிக்கையையும் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதத்தையும் அணுக்கமாகக் கண்காணித்து, அதற்கேற்ப தடுப்பூசி மையங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன,” என்று அவர் விளக்கினார்.