கி. ஜனார்த்தனன்
கொவிட்-19 கிருமிப் பரவல் கடந்தஆண்டு வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளை உலுக்கி வந்தபோது ஊழியர்களுக்காக கொவிட்-19 மருத்துவப் பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்த சுகாதார மேம்பாட்டு ஆலோசகர் ஜயலட்சுமி ஆரத்தி, 30, கலைப்படைப்பு ஒன்றில் சித்திரிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களில் ஒருவர்.
தேசிய சுகாதாரப் பராமரிப்பு குழுமத்தில் சுகாதார மேம்பாட்டு ஆலோசகராகப் பணியாற்றும் திருவாட்டி ஜயலட்சுமி இடம்பெற்ற படம் கடந்த மாதம் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஐயோன் ஆர்ச்சர்ட் கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
'நமது காலத்தின் நாயகர்கள்' என்ற பொருளைக் கொண்டுள்ள 'ஹீரோஸ் ஆஃப் அவர் டைம்' கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. சிங்கப்பூர் கலைச் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்கண்காட்சிக்கு சுகாதார, தொடர்பு தகவல் துறைகளுக்கான மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி சிறப்பு வருகை மேற்கொண்டார்.
'ஹீரோஸ் ஆஃப் அவர் டைம்' என்ற கலைப்படைப்புகளில் திருவாட்டி ஜயலட்சுமி இடம்பெற்ற ஓவிமும் அடங்கும். 1.8 மீட்டர் உயரமும் 3 மீட்டர் அகலமும் கொண்டுள்ள இப்படத்தை சிங்கப்பூர் கலைச் சங்கத்தைச் சேர்ந்த 18 ஓவியர்கள் உருவாக்கினர்.
கண்காட்சிக்குப் பிறகு அந்த ஓவியம் தேசிய தொற்றுநோய் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. அக்ரிலிக் ஓவியமான இந்த ஓவியத்திற்கான பணிகள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நிறைவேறுவதற்கு ஆறு மாதங்கள் ஆனதாக சம்பந்தப்பட்ட ஓவியர்களில் ஒருவரான கலைச் சங்கத்தின் தலைவர் டெரன்ஸ் டியோ கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கடந்த மாதம் தெரிவித்தது.
புற்றுநோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுக்கான பரிசோதனை முறைகளை அமைப்பது திருவாட்டி ஜயலட்சுமியின் வழக்கமான பணி.
ஆனால் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கிருமிப் பரவல் மோசமானதை அடுத்து, அவர் அந்த விடுதிகளுக்கு அனுப்பப்பட்டார்.
கிட்டத்தட்ட 30 வெவ்வேறு விடுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட கொவிட்-19 மருத்துவப் பரி சோதனைகள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ததுடன், கிருமிப் பரவல் தொடர்பான சுகாதாரப் பழக்கவழக்கங்களை ஊழியர்களுக்கு கற்றுத்தந்த திருவாட்டி ஜயலட்சுமி, அவர்களது பயத்தைப் போக்குவதற்காக உற்சாக வார்த்தைகளைப் பேசி அவர்களுக்குத் தைரியமூட்டியதாகக் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்களுடன் பேசி அவர்களது உணர்வைப்
பகிர்ந்துகொண்டது மறக்க முடியாத தருணமாக அமைந்ததாகக் கூறினார் திருவாட்டி ஜயலட்சுமி தெரிவித்தார்.
"தங்களுக்கு இந்திய உணவு கிடைக்கவில்லை என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக இதுகுறித்து விடுதி நிர்வாகிகளிடம் பேசி அவர்ளுக்கு இந்திய உணவு வழங்கும்படி கேட்டுக்கொண்டேன்," என்றார் அவர்.
விடுதிகளிலுள்ள அறிவிப்புப் பலகைகளை இவர் தமிழாக்கம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. தமிழ் பேசும் ஊழியர்களுடன் பேசி அவர் களுடய கருத்துகளைப் பகிர்ந்துகொள்வது எளிதாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
அதையும் தாண்டிய பரிவு, அன்பு போன்ற உணர்வுகளை ஒருவருக்கு ஒருவர் வெளிப்படுத்துவது, கிருமிப் பரவல் போன்ற ஆபத்தான சூழலில் ஆறுதலாக இருப்பதாகத் தெரிவித்தார்.
"எனவே உணர்வுகளை ஓவியத்தில் வெளிப்படுத்த முடிந்தது மனநிறைவைத் தருகிறது," என்று அவர் தெரிவித்தார்.
"இந்த ஓவியத்தில் சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களின் உழைப்பைக் காட்டுவது அவர்களது குழு உணர்வு, கடமையுணர்வு, ஒருமைப்பாடு ஆகியவற்றையும் பிரதிபலிக்கிறது.
"சமூகத்தைப் பாதுகாப்பாக வைப்பதற்காக கடமைக்கு அப்பாற்பட்டு பணியாற்றிய முன்களப் பணியாளர்கள் இவ்வாறு தொடர்ந்து அங்கீகரிக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆயினும், கொவிட்-19க்கு எதிரான போர் முடிவுக்கு வர காலமெடுக்கும். இப்போரில் வெற்றி பெற சமுதாயத்திலுள்ள அனைவரும் பங்காற்ற வேண்டும்," என்றார் திருவாட்டி ஜயலட்சுமி.